வசந்தகுமாரனின் பேனா
மாதாப்பூரின் உயர்தர நகரில் உள்ளிருக்கும் அழகின் ராட்சதமாகிப்போய் எழும்பி உயர்ந்து நிற்கும் பல பெட்டகமாக மடிக்கப்பட்ட கட்டிடங்களின் ஒரு பகுதியின் வாயிலில் வசந்தகுமாரனும் இன்ன சிலரும் வரிசையாய் நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். பெயர், அலைபேசி எண், அடையாள அட்டை ஏதேனும் ஒன்று, யாரை அணுக முனைகிறீர்கள், இவை எல்லாவற்றையும் எழுதி முடிக்க பேனா வேண்டும் வசந்தகுமாரனுக்கு. எறும்பு நகர்வது போல வரிசை சீராக தொடர்ந்து முன்னேறுகிறது தன்னுடைய முறை வருவதற்கு இன்னமும் இரண்டுபேரை கடந்தாக வேண்டும். அதற்குள் தனக்கு முன் நிற்கும் யுவதியிடம் பேனா வேணும் என்பதை எப்படி கேட்கலாம் என ஆங்கில வார்த்தைகளை கட்டமைக்க முயற்சிக்கையில் ஒத்திகையில் மொழி மறந்து சொற்கள் இல்லாமல் போகிறது இதோ இவன் முறை வந்தேவிட்டது அத்தனை பதட்டத்தில் இருந்தவனிடம் மிக நிதானமாக இவனைப் பார்த்து அவள் கேட்டாள் பேனா வேணுங்களா?